பெண் என்ஜினீயரை குத்திக்கொன்ற சித்தப்பா… அதிர வைத்த காரணம்!

திருவள்ளூரில் சொத்து தகராறில் பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரை அவரது சித்தப்பா சரமாரியாக குத்திக்கொலை செய்தார்.

திருவள்ளூர் பெரியகுப்பம் கே.கே.நகரில் உள்ள கற்குழாய் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவருடைய மகள் சிவரஞ்சனி (வயது 27). இவர், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

சிவரஞ்சினிக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சித்தப்பா பாலச்சந்தர் (39) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று காலை சொத்து தகராறு காரணமாக இவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

குத்திக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த பாலசந்தர், தன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து வீட்டில் அமர்ந்திருந்த சிவரஞ்சனியின் முதுகில் குத்தினார். இதில் சிவரஞ்சினி அலறி துடித்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத பாலச்சந்தர், சிவரஞ்சனியின் கழுத்து, மார்பு என 7 இடங்களில் சரமாரியாக குத்தினார்.

இதில், பலத்த காயம் அடைந்த சிவரஞ்சனி, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவரஞ்சனியின் சித்தப்பாவான பாலச்சந்திரனைகைது செய்து விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!