மகனுக்கு வேர்கடலை கொடுத்த வியாபாரி.. கடனை 12 ஆண்டுக்கு பிறகு கொடுத்த வாலிபர்!

கடற்கரையில் வேர்கடலை வியாபாரியிடம் பெற்ற ரூ. 25 கடனை 12 ஆண்டுகளுக்கு பிறகு நினைவில் வைத்து திருப்பி கொடுத்த வாலிபரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது மகன் பிரவீனுடன் காக்கிநாடா கடற்கரைக்கு சென்றார்.

அப்போது கடற்கரையில் வேதசத்தைய்யா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தார். அவரிடம் சிறுவன் பிரவீன் ரூ.25-க்கு வேர்க்கடலை வாங்கினான். ஆனால் அவனது தந்தை மோகனிடம் பணம் இல்லை.

இதனால் வேர்க்கடலை பொட்டலத்தை பிரவீன் திருப்பி வேதசத்தைய்யா விடம் கொடுத்தார். அதற்கு வேதசத்தைய்யா, பணத்தை நாளைக்கு வந்து கொடுங்கள் என்று கூறினார். மறுநாள் மோகன், பிரவீன் இருவரும் கடற்கரைக்கு சென்றபோது வேதசத்தையா வரவில்லை.

அதன்பின் மோகன், தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டார். இதற்கிடையே விடுமுறையில் காக்கிநாடாவுக்கு வந்து பிரவீன், வேதசத்தையாவிடம் வாங்கிய ரூ.25 கடனை திருப்பி கொடுக்க விரும்பினர். இதற்காக காக்கிநாடா கடற்கரைக்கு சென்று வேதசத்தையாவை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பிரவீன் தனது உறவினரும் காக்கிநாடா எம்.எல்.ஏ.வுமான சந்திர சேகரிடம் தெரிவித்தார்.

மேலும் வேதசத்தையாவுடன் பிரவீன் எடுத்த புகைப்படத்தையும் அனுப்பினார். அந்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வேதவத்தையாவை தேடினர் அதை பார்த்த சிலர் வேதசத்தையா இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வேதசத்தையா மனைவியை எம்.எல்.ஏ. வீட்டுக்கு பிரவீன் வரவழைத்தார்.

அவரிடம் பிரவீன் தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ.25-க்கு வட்டியுடன் சேர்த்து ரூ 23 ஆயிரமாக திருப்பி கொடுத்தார்.

கடன் தொகை மிக சிறியது என்றாலும் அதை பல ஆண்டுகளுக்கு பிறகு நினைவில் வைத்து திருப்பி கொடுத்த பிரவீனை சமூக வலைதளங்களில் பாராட்டின.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!