அங்கிள் என அழைத்த இளம்பெண்… அறைந்த கடைக்காரர்!

இளம்பெண் தன்னை ‘அங்கிள்’ என அழைத்ததைக் கேட்டு ஆத்திரமடைந்த மொஹித் குமார் அந்த இளம்பெண்ணை பலமாகத் தாக்கியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடையை மொஹித் குமார் (35) என்பவர் நடத்தி வருகிறார்.

கடந்த வாரம் இந்தக் கடைக்கு 18 வயது இளம்பெண் ஒருவர் வந்துள்ளார்.அவர் கடைக்காரர் மொஹித் குமாரை ‘அங்கிள்’ (Uncle)என அழைத்துள்ளார். இளம்பெண் தன்னை ‘அங்கிள்’ என அழைத்ததைக் கேட்டு ஆத்திரமடைந்த மொஹித் குமார் அந்த இளம்பெண்ணை அறைந்து பலமாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் குணமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் தானாக முன்வந்து, இளம்பெண்ணை தாக்கிய கடைக்காரர் மொஹித் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சித்தர்கஞ்ச் பகுதி போலிஸார் கூறுகையில், “18 வயது இளம்பெண், மொஹித் குமாரின் கடையில் பேட்மிண்டன் ராக்கெட் வாங்கியுள்ளார். அதன் சில ஸ்ட்ரிங் விடுபட்டிருந்த காரணத்தால் அதை மாற்ற மீண்டும் கடைக்கு வந்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் ‘அங்கிள் ’ என அழைத்த காரணத்தால் மொஹித் குமார் ஆத்திரமடைந்து அப்பெண்ணைத் தாக்கியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!