13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் கைது!

அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொரு ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு கடந்த 7-ந்தேதி ராமநாதபுரம் சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது, அந்த பள்ளியில் படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகள் சிலர், தங்களுக்கும் பாலியல் தொல்லை வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

2 ஆசிரியர் மீது புகார்

அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, அந்தப் பள்ளியில் பணியாற்றிவரும் கணித ஆசிரியரான பரமக்குடி மணிநகர் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் வளவன் பாபு, சமூக அறிவியல் ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் சேதுராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜா (வயது 39) என்பவரும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற பின்பு அவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி பாலியல் தொந்தரவு செய்வது என அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர்.

13 மாணவிகள்

அதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 13 மாணவிகளுக்கு மேற்கண்ட 2 ஆசிரியர்களும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.

ஒருவர் கைது

பின்னர் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் வசந்தகுமார், பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி 2 ஆசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தார்.

இதைதொடர்ந்து ஆசிரியர் ராமராஜாவை மதுரையில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஆல்பர்ட் வளவன் பாபுவை தேடி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!