போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் விபரீத முடிவு!

திருவொற்றியூரில் போலீ்ஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை எடுக்க விடாமல் 12 மணிநேரமாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 26). தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மகாவைஷ்ணவி. இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

கடந்த நவம்பர் மாதம் நடந்த ஒரு தகராறில் போலீசார் பரசுராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 நாட்கள் கழித்து வெளியே வந்த பரசுராமன், வழக்கம்போல் வேலைக்கு சென்று வந்தார்.

நேற்றுமுன்தினம் சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் இருந்து பரசுராமன் வீட்டுக்கு வந்த 2 போலீசார், பரசுராமன் மீது 110 விதியின்படி நன்னடத்தை வழக்குப்பதிவு செய்து அவர் மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் முன்பு ஆஜராகி நன்னடத்தை பத்திரத்தில் எழுதி கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். அவர் வரவில்லை என்றால் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் அழைத்துச்செல்வோம் என்று மிரட்டி விட்டு சென்றதாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

வேலை முடிந்து இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்த பரசுராமனிடம் இதுபற்றி அவரது பெற்றோர் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பரசுராமன், வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை 7 மணி ஆகியும் அவரது அறை கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், ஜன்னல் வழியாக பார்த்தபோது பரசுராமன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்துதான் பரசுராமன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உறவினர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர்.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் பரசுராமனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்காக வந்தனர். ஆனால் போலீஸ் தொந்தரவு தாங்க முடியாமல் பரசுராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் வீட்டுக்கு வந்து எச்சரித்து சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பிணத்தை எடுக்க விடமாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் பிணத்தை எடுக்க விடாமல் வீட்டில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனம், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பரசுராமன் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் பிணத்தை எடுக்க வழி விடுமாறு உறவினர்களிடம் கூறினர். ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை ஒப்படைக்கமாட்டோம் என்று கூறி 12 மணி நேரமாக போராடி போலீசாரை தடுத்தனர்.

ஆம்புலன்ஸ் மீது கல்வீச்சு

இதையடுத்து போலீசார், உறவினர்களை அப்புறப்படுத்தி விட்டு பரசுராமன் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், ஆம்புலன்சில் கல்வீசி தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்தது.

இதையடுத்து போலீசார், பரசுராமன் உடலை போலீஸ் வாகனத்தில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மேலும் பொதுமக்கள் கல்வீசி தாக்கியதில் மணிகண்டன் என்ற ஆயுதப்படை போலீஸ்காரருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

சாலை மறியல்

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் நிலையம் நிறுத்தம் அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பரசுராமனின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!