டேட்டிங்’ வலைதளம் மூலம் காதல் – ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம்!

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு குடும்பத்தில் உள்ள முக்கியமானவர்களின் ஆதரவு கிடைத்தால் அது எங்களை போன்றவர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை தரும் என்று சுப்ரியோ சக்கரவர்த்தி கூறினார்.

ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் அபய்டாங்கே (வயது 34), சுப்ரியோ சக்கரவர்த்தி (31). ஆண்களான இவர்கள் இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு ‘டேட்டிங்’ வலைதளம் மூலமாக நட்பு ஏற்பட்டது.

ஓரினச்சேர்க்கையாளர்களான இவர்களின் நட்பு நாளுக்கு நாள் வலுவானது. இதையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதுபற்றி தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் கூறினார்கள். அவர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவருக்கும் ஐதராபாத் புறநகரில் திருமணம் நடந்தது. திருமண சடங்குகள் பஞ்சாப் மற்றும் வங்க முறைப்படி கலவையாக இருந்தது. திருமண விழாவில் மெகந்தி, ஹெல்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இருவரின் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்களின் வாழ்த்துக்களுடன் திருமணம் தடபுடலாக நடந்தது. இருவரும் மோதிரம் மாற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டு இல்லற வாழ்வில் இணைந்தனர்.

இந்த திருமணம் தொடர்பாக சுப்ரியோ சக்கரவர்த்தி கூறியதாவது:-

நானும் அபய்டாங்கேயும் 8 ஆண்டுகளுக்கு முன்பு டேட்டிங் மூலம் சந்தித்தோம். பின்னர் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆனோம். அபய் டாங்கேயை எனது தாயிடம் அறிமுகப்படுத்தி எங்களுக்குள் உள்ள உறவை சொன்னேன். திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தேன்.

ஆச்சரியப்பட்ட அவர் அவரது முடிவை சொல்ல 2 நாட்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் எங்களது முடிவை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார். எங்கள் உறவுக்கு பெற்றோர் மிகவும் ஆதரவாக இருந்தனர். எங்கள் காதலுக்கும் பச்சைக்கொடி காட்டினார்கள்.

இன்று எனது கணவருடன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அபய்யை எனது துணைவி என்று அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களை நேசிப்பது ஒரு ஆசீர்வாதம். இந்த நாளுக்கும், எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளுக்கும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு குடும்பத்தில் உள்ள முக்கியமானவர்களின் ஆதரவு கிடைத்தால் அது எங்களை போன்றவர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!