மகனுக்காக பழைய உலோகத்தில் கார் தயாரித்த நபருக்கு கிடைத்த பரிசு..!

பழைய உலோகத்தைப் பயன்படுத்தி நான்கு சக்கர வாகனம் உருவாக்கிய நபருக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா புதிய காரை பரிசாக வழங்கி உள்ளார்.

மராட்டியாவை சேர்ந்த தத்தாத்ராய லோகர் என்ற நபர் தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சொந்தமாக ஒரு காரை வடிவமைத்து உள்ளார்.தனது வீட்டில் இருந்த பழைய உலோக பொருள்கள் மற்றும் துணி , கண்ணாடி போன்றவற்றை பயன்படுத்தி இந்த காரை அவர் தயாரித்துள்ளார்.இந்த காரை அவர் தயாரிப்பதற்கு ரூ.60,000 செலவு செய்துள்ளார். இது குறித்த செய்தி இணையத்தில் சமீபத்தில் வைரலானது.

இந்த நிலையில் இந்த செய்தியை சமூக வலைத்தளம் மூலம் அறிந்த மகேந்திரா கார் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தத்தாத்ராய லோகரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த கார் தெளிவான விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் உருவாக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் நம் மக்களின் புத்தி கூர்மை மற்றும் திறன்களைப் பாராட்டுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்’ என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் தத்தாத்ராய லோகர் குறித்த ஒரு பதிவை ஆனந்த் மகேந்திரா பதிவிட்டுள்ளார். அதில் ” தத்தாத்ராய லோகர் உருவாக்கிய வாகனம் ஓட்டுவதற்கான விதிமுறைகளை மீறுவதால் உள்ளூர் அதிகாரிகள் விரைவில் அந்த வாகனத்தை தடைசெய்வர் . நான் தனிப்பட்ட முறையில் அவருக்குப் பொலேரோ காரை வழங்குவேன். ‘வளம்’ என்பது குறைந்த வளங்களைக் கொண்டு அதிகம் செய்வதைக் குறிக்கும் என்பதால், அவரது உருவாக்கம் நம்மை ஊக்குவிக்கும் ” என தெரிவித்துள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!