பெத்த மகளை கர்ப்பிணியாக்கி விட்டு காதலன் மீது பழி போட்ட தந்தை!

தேனி அருகே மகளை கர்ப்பிணியாக்கி விட்டு காதலன் மீது பழி போட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியின் வயதில் சந்தேகமடைந்த டாக்டர்கள் இது குறித்து குழந்தைகள் நலக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு 17 வயது என தெரியவந்தது. இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சிறுமியிடம் கேட்ட போது தனது உறவினரான 22 வயது வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பிணியானதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. அப்போது சிறுமியை தான் காதலித்தது உண்மைதான் என்றும் ஆனால் அவரது குழந்தைக்கு தான் தந்தை அல்ல என்றும் தான் அவரிடம் தவறாக நடக்கவில்லை என்றும் நீதிபதி முன்பு கதறி அழுதார்.

இதனையடுத்து போலீசார் சிறுமியின் தந்தை மீது சந்தேகமடைந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது முன்ணுக்குப்பின் முரணாக தகவலளித்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை மற்றும் காதலன் மற்றும் பிறந்த குழந்தை ஆகிய 3 பேருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிறுமியின் தந்தையின் டி.என்.ஏ.வும், குழந்தையின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போனது. ஆனால் காதலனின் டி.என்.ஏ. வேறுபட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தையிடம் நடத்திய விசாரணையில் அவர் தனது மகளை பலாத்காரம் செய்ததை ஒத்துக்கொண்டார். மேலும் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி வந்துள்ளார். இதனையடுத்து போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்து அவரது காதலனை விடுவித்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!