கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக மரணம்..!

டிப்பர் லாரி மோதி தொழிலாளி ஒருவர் பலியானார். கணவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவியும் பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி மீது வேன் மோதல்

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள வாதானூர் காலனி திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் பாலையா (வயது 70). தொழிலாளியான இவர் தனது வீட்டில் மாடு ஒன்றினை வளர்த்து வருகிறார். மாலை 6 மணி அளவில் தனது வீட்டில் மாட்டில் கறந்த பாலினை அப்பகுதியில் உள்ள பால் சொசைட்டியில் கொடுத்து விட்டு சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

வாதானூர் மெயின் ரோடு பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது திருவக்கரையில் இருந்து ஜல்லி லோடு ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி பாலையா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிர்ச்சியில் மனைவி சாவு

இதனையறிந்து அவரது உறவினர்கள் அப்பகுதியில் திரண்டனர். வீட்டில் இருந்த அவரது மனைவி முத்துலட்சுமி ( 60) என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்ட மனைவி முத்துலட்சுமி அலறி அடித்தவாறு கதறி அழுது கொண்டே சம்பவ இடத்துக்கு ஓடி வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முத்துலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் கணவன்,மனைவி இருவரும் இறந்ததால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்துபோன தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் இருந்தனர். இவர்களது மகன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் அதிர்ச்சியால் உயிரிழந்த சம்பவத்தால் வாதானூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!