நடிகை கத்ரீனா கைப்பின் ஆடம்பர திருமணம் – வழக்கறிஞர் போலீசில் புகார்!

திருமணத்துக்காக பழமையான கோயில் பாதையை அடைத்துள்ளதாக, ராஜஸ்தானைச் சேர்ந்த நைட்ராபிண்ட் சிங் ஜாடோன் என்ற வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்

பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைப், நடிகர் விக்கி கவுசல் ஆடம்பர திருமண ஏற்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் வருகிற 9-ந் தேதி இவர்களது திருமணம் நடக்க உள்ளது.

கோடிக்கணக்கான செலவில், மலர்கள், வண்ண விளக்குகள் மற்றும் வரவேற்பு வளைவுகளால் அந்த கோட்டை அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நடிகர், நடிகைகள் அழைக்கப்பட்டு உள்ளனர். திருமணத்துக்காக மணமக்கள் தங்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை ரூ.7 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள், நடிகர் நடிகைகள் தங்க அங்குள்ள ஆடம்பர ஓட்டல்களின் அறைகள் அனைத்தையும் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் திருமணத்துக்காக, பழமையான கோயில் பாதையை அடைத்துள்ளதாக, ராஜஸ்தானைச் சேர்ந்த நைட்ராபிண்ட் சிங் ஜாடோன் என்ற வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். கேத்ரினா- விக்கி கவுசல் திருமணத்துக்காக, பழமையான சாத் மாதா கோயில் உள்ள சாலையை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மூடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழியில்தான் சிக்ஸ் சென்சஸ் நட்சத்திர ஓட்டல் இருப்பதால் இந்த சாலையை அவர்கள் மூடியதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து அவர் அந்த புகாரை அளித்துள்ளார். கேத்ரினா, விக்கி கவுசல், நட்சத்திர ஓட்டலின் மேலாளர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மீது புகார் தெரிவித்துள்ள அந்த வழக்கறிஞர், உடனடியாக கோயில் இருக்கும் சாலையை திறக்க வேண்டும் என்றும் இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!