படியில் கூச்சலிட்டபடி தொங்கி பயணம்… நடுரோட்டில் அரசு பஸ்சை நிறுத்தி சென்ற டிரைவர்!

கூச்சலிட்டபடி படியில் தொங்கி கொண்டு பயணம் செய்த மாணவர்களால் ஆத்திரமடைந்து பஸ்சை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு டிரைவர் சென்று விட்டார்.
,

கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பஸ் மூலம் வந்து செல்கின்றனர். இதில், சில உள்கிராமங்களுக்கு ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் தொங்கியபடியே பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு வழியாக பாப்பாகுடி சென்ற அரசுப் பஸ்சில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. இதனால் மாணவர்கள் படிகளில் தொங்கியபடியே பயணித்துள்ளனர். அவர்களை உள்ளே வரச்சொல்லி டிரைவர் பலமுறை சத்தமிட்டும், மாணவர்கள் தொங்கியபடியே பயணித்துள்ளனர்.

இதனால் பஸ்சை ஓட்ட முடியாமல் சிரமமடைந்த டிரைவர் ஆத்திரமடைந்து அரசுபஸ்சை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரை மணி நேரமாக சாலையிலேயே நின்றுகொண்டிருந்த பஸ்சால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ்ம் செல்லமுடியாமல் சிக்கிக்கொண்டது.

பின்னர் வெகுநேரம் கழித்து அங்கு வந்த டிரைவர் பஸ்சை எடுத்து சாலையின் ஓரமாக நிறுத்தினார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் பஸ்சை இயக்கும்படி கூறியதன் பேரில் டிரைவர் பஸ்சை எடுத்தார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!