ராம்குமார் மரண வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ராம்குமார் வழக்கை தமிழக மனித உரிமை ஆணையம் விசாரித்து வந்த நிலையில், உயர்நீதிமன்றம் அதற்கு தடைவித்துள்ளது.


பொறியாளர் சுவாதி கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் காலை 6.30 மணியளவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

பரபரப்பான இந்த கொலை வழக்கில் தென்காசி மாவட்டம் (அப்போது திருநெல்வேலி) மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சுவாதியை ஒரு தலையாக காதலித்ததாகவும், அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் சுவாதியை ராம்குமார் கொலை செய்துவிட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், சிறையில் இருந்த மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறையினர் அறிவித்தனர். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராம்குமாரின் தந்தை பரமசிவம், மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

தமிழக மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்தது. தற்போது விசாரணை தொடங்கப்பட்டு பல்வேறு நபர்களிடம் வாக்கு மூலங்களை பெற்று வருகிறது. இதில் சிறைத்துறை மருத்துவர் பாலசுப்பிரமணியம் அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் பெரும் திருப்பமாக அமைந்துள்ளது. அதாவது, சிறையிலேயே ராம்குமார் இறந்துவிட்டதாகவும், மின்சாரம் தாக்கியதற்கான எந்த அறிகுறியும் ராம்குமாரின் மேல் உதட்டிலும், உடலிலும் இல்லை என்றும் சிறைத்துறை மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ராம்குமாரின் உடலின் மீது ஆங்காங்கே சிராய்ப்பு காயங்களும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஓய்வு பெற்ற புழல் சிறை கண்காளிப்பாளர் சம்பவம் நடந்த ஓராண்டுக்குள் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம். 4 ஆண்டுகளுக்கு பின் மனித உரிமை ஆணையம் விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மரணம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த மனுவுக்கு மனித உரிமை ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!