தடுப்பூசி போட நிபந்தனை போட்ட கூலி தொழிலாளி- அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர்!

ஜோலார்பேட்டை அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார பணியாளர்களிடம் ரூ.10 லட்சம் கேட்ட முதியவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெத்தகல்லு பள்ளி பகுதிகளில் ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ குழுவினர் டாக்டர் புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் கோபி மற்றும் சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 50 வயது தொழிலாளி வீட்டிற்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சுகாதார பணியாளர்கள் சென்றனர்.

அப்போது அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால் சுகாதார பணியாளர்கள் மீண்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவரிடம் கேட்டனர்.

அதற்கு அவர் எனக்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன். மேலும் என் உயிருக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். இதனை பாண்டு பத்திரத்தில் எழுதி தர வேண்டும் என கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுகாதார பணியாளர்கள் அவருக்கு கொரோனா தடுப்பூசி போடாமல் திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!