வாட்ஸ்-அப்பில் மூத்த மகளுக்கு குறுந்தகவல் – தாய்-மகள் விபரீத முடிவு!

போதிய வருமானம் கிடைக்காததாலும், கணவர் இறந்த சோகத்தினாலும் விரக்தி அடைந்த நிேராஷா, மகள் வினிதாவுடன் கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிரோஷா (வயது 35). பூ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு தர்ஷினி (வயது 9), வினிதா (7) என 2 மகள்கள். இவருடைய கணவர் விஜயகுமார், 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தனது மூத்த மகள் தர்ஷினியை அவரது பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, இளைய மகள் வினிதாவுடன் நிரோஷா வசித்து வந்தார்.

நிரோஷா தினமும் ஆவடி சென்று பூ விற்பனை செய்து வந்தார். ஆனால் அதில் போதிய வருமானம் கிடைக்காததாலும், கணவர் இறந்த சோகத்தினாலும் விரக்தி அடைந்த நிேராஷா, மகள் வினிதாவுடன் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு செல்லியம்மன் கோவில் அருகே கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் தேடியும் அவர்களின் உடல் கிடைக்கவில்லை. வெள்ளத்தில் அவர்களது உடல் பல கிலோ மீட்டருக்கு அப்பால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக நிரோஷா, தனது செல்போன் மூலம் மூத்த மகளுக்கு ‘ஐ மிஸ் யூ தர்ஷினி’ என வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் அனுப்பி இருந்தார். இதுபற்றி வெங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!