கோவை மாணவி விவகாரத்தில் தலைமறைவான பள்ளி முதல்வர் கைது!

பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.

கோவையில் பிரபல தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக மாணவி புகார் அளித்தும் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மீரா ஜாக்சன் தலைமறைவானதை அடுத்து அவரைப் பிடிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பெங்களூரு தனிப்படை போலீசார் மீரா ஜாக்சனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவரை, இன்று மாலை கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் (மேற்கு) அழைத்து வரப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!