ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் – சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்!

‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்பட மூவருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.


ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.

இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் ஒரு காட்சியில் அவர் தொலைபேசியில் பேசும்போது பின்னணியில் வன்னியர் சங்க காலண்டர் இடம்பெற்றிருக்கும், இதுவே எதிர்ப்புக்கும் காரணமானது.

இதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.

இந்நிலையில், ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த நோட்டீஸில், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!