ஆர்யன் கானிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

போதை பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சொகுசு கப்பல் வழக்கு உள்பட 6 வழக்குகள் போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

மும்பை – கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் சோதனை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் போதை பொருள்வழக்கில் ஆர்யன் கான் மற்றும் அவருடன் கைதான அர்பாஸ்மெர்ச்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் மும்பை ஐகோர்ட்டால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அப்போது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவின் முன் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று ஆர்யன் கான் தென்மும்பையில் உள்ள போதை பொருள் அலுவலகத்தில் ஆஜரானார். மாடல் அழகு முன்முன் தமேச்சாவும் ஆஜரானார்.

இதேபோல ஆர்யன் கான் நேற்று நவிமும்பையில் போதை பொருள் சிறப்பு புலனாய்வு பிரிவிலும் ஆஜரானார். அவர் போதை பொருள் வழக்கு தொடர்பாக துணை இயக்குனர் ஜெனரல் சஞ்சய் குமார் சிங் தலைமையிலான குழுவினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார். மேலும் அதிகாரிகள் வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர்.

போதை பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சொகுசு கப்பல் வழக்கு உள்பட 6 வழக்குகள் போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதில் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆர்யன் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் உடல்நிலையை காரணம் காட்டி ஆஜராகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!