ரயிலின் கழிவறைக்கு இரவு நேரம் சென்ற நபரால் அலறியடித்த துப்பரவு பணியாளர்கள்…!


ட்விட்டர் மூலம் ரயில் கழிவறை சுத்தம் இல்லாதது குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, துப்புரவு பணியாளர்கள் பதறியடித்து வந்து ரயில் கழிவறையை சுத்தம் செய்தனர். நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு தினசரி இரவு, 7:10 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 17236) இயக்கப்படுகிறது.

இந்நிலையில் ரயிலின் ‘எஸ் – 3’ ஸ்லீப்பர் கோச் பெட்டியில் கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் பெங்களூருக்கு பயணித்துள்ளார். அந்த பெட்டியின் கழிவறை சுத்தம் செய்ய்ப்படாமல் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் புலம்பிக் கொண்டே வந்தனர்.

இதனையடுத்து அந்த கம்பார்ட்மெண்டில் பயணம் செய்த கேரள வாலிபர் சுத்தம் இல்லாத கழிவறையை செல்போனில் புகைப்படம் எடுத்து, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலின் ட்விட்டர் பக்கத்தில், இரவு 8:00 மணியளவில் தனது புகாரை பதிவு செய்தார்.

சுமார் 9:00 மணிக்கு ரயில் திருநெல்வேலி சந்திப்பு வந்தடைந்தது. அங்கிருந்த துப்புரவு பணியாளர்கள் ஓடிவந்து கழிவறையை சுத்தம் செய்தனர். இதனால் பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.

இதனையடுத்து கேரள வாலிபரின் ட்விட்டர் கணக்கிற்கு பியுஷ் கோயலின் ட்விட்டர் கணக்கிலிருந்து உங்கள் புகாருக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது என பதில் ட்வீட் அனுப்பப்பட்டிருந்தது. இரவு நேரத்திலும் வேகமாக செயல்பட்ட மத்திய அமைச்சகத்தின் நடவடிக்கையை பயணிகள் பாராட்டினர். – Source: webdunia.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!