தீபிகா படுகோனின் பத்மாவத் படத்துக்கு தடை – மலேசியாவில் தணிக்கை குழு அதிரடி..!

தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள பத்மாவத் படத்துக்கு தடை விதித்து மலேசியா நாட்டு தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.

14-ம் நூற்றாண்டில் சித்தூர் சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த ராணி பத்மாவதியை மையமாக வைத்து பத்மாவதி என்ற பெயரில் வரலாற்று திரைப்படம் தயாரானது. இதில் ராணி பத்மாவதி மற்றும் ராஜபுத்ர வம்சத்தினர் குறித்தும் அவதூறான காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி படத்துக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் பத்மாவத் திரைப்படம் வெளியாகி, 4 நாள்களில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாயை ஈட்டியுள்ளது.

இந்நிலையில், முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக மலேசியாவில் பத்மாவத் படத்துக்கு தணிக்கை குழு தடை விதித்து உள்ளது.


இதுதொடர்பாக தணிக்கை வாரிய அதிகாரிகள் கூறுகையில், பத்மாவத் திரைப்படம் முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மலேசியாவில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தணிக்கை வாரியத்தின் தடையை எதிர்த்து வினியோகஸ்தர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

ஆனால், சர்ச்சைக்குரிய பத்மாவத் படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்காமல் திரையிட பாகிஸ்தான் தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!