சொட்டுமருந்து என நினைத்து சிறுவனின் கண்ணில் சூப்பர் குளுவை ஊற்றிய தந்தை!

சொட்டுமருந்து என நினைத்து ஒட்டுப்பசையை கண்ணில் ஊற்றிய தந்தையால், மகன் 4 நாட்கள் கண்களை திறக்கமுடியாமல் அவதியடைந்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் நார்த் யார்க்‌ஷ்ரி மாகாணம் திரிஷ்க் நகரை சேர்ந்தவர் கேவின் டே. இவருக்கு ரூபர்ட் என்ற மகன் உள்ளார். 9 வயதான ரூபர்ட்டுக்கு இடது கண்ணில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனது தந்தையான கேவின் டேவிடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கண் அரிப்பை குணப்படுத்தும் சொட்டுமருந்தை தேடியுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த ஒட்டுப்பசையை (சூப்பர் குளு) கண்ணுக்கு ஊற்றும் சொட்டுமருந்து என தவறுதலாக நினைத்து அதை எடுத்துள்ளார். அந்த ஒட்டுப்பசையை கேவின் தனது மகன் ரூபர்ட்டின் இடது கண்ணில் ஊற்றியுள்ளார்.

தான் ஒட்டுப்பசையை மகனின் கண்ணீல் ஊற்றுகிறோம் என்பதை அறியாத கேவின் பசை முழுவதையும் ரூபர்டின் கண்ணில் ஊற்றியுள்ளார். அதன்பின்னர் சிறிது நேரத்தில் தான் ஒட்டுப்பசையான சூப்பர் குளுவை தனது மகன் இடது கண்ணில் ஊற்றியதை கேவின் உணர்ந்துள்ளார்.

உடனடியாக ரூபர்டிடம் கண்களை திறக்கும்படி கேவின் கூறியுள்ளார். ஆனால், தனது இடது கண்ணை ரூபர்ட்டால் திறக்கமுடியவில்லை. ஒட்டுப்பசை ரூபர்ட்டின் இடது கண்ணை மூடியுள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவக்குழுவினருக்கு கேவின் தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் ரூபர்ட்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது இடது கண்ணை திறக்க மருத்துவர்கள் முயற்சித்தனர்.

ஆனால், மருத்துவர்களால் ரூபர்ட்டின் கண்ணை திறக்கவைக்க முடியவில்லை. 4 நாட்கள் ரூபர்ட் தனது இடது கண்ணை திறக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

4 நாட்களுக்கு பின்னர் ரூபர்ட்டின் கண்களை மூடியிருந்த ஒட்டுப்பசை மெல்ல விலகியது. கண்ணை தொடர்ச்சியாக தண்ணீரால் கழுவியதால் பசையின் ஒட்டுத்தன்மை குறைந்து கண்ணை திறக்க வழிபிறந்துள்ளது.

இதனை தொடர்ந்து 4 நாட்கள் அவதிக்கு பின்னர் ரூபர்ட் தனது இடது கண்ணை திறந்துள்ளார். ஆனால், அவரின் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் ரூபர்ட்டின் கண்பார்வை தற்போது நல்ல நிலைக்கு வந்துள்ளதாக அவரது தந்தை கேவின் தெரிவித்துள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!