பாலியல் கும்பலிடம் மகளை விற்ற காதலன்-தந்தையின் கார் ‘டிக்கி’யை பார்த்து அதிர்ந்த போலீசார்!

தனது மகளை பாலியல் தொழிலில் செய்யும் கும்பலிடம் விற்ற காதலனை அப்பெண்ணின் தந்தை கொலை செய்து உடலை கார் ’டிக்கி’க்குள் அடைத்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் ஸ்போகெனி நகரை சேர்ந்தவர் ஜான் இசென்மன் (60). இவரின் மகள் அரோன் சோரன்சன் என்ற 19 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், அரோன் சோரன்சன் பணத்திற்காக தனது காதலியான ஜான் இசென்மனின் மகளை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். சியாட்டல் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டும் கும்பலிடம் தனது காதலியை 1,000 அமெரிக்க டாலருக்கு அரோன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளார்.

தனது மகள் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் சிக்கியதை அறிந்த ஜான் இசென்மன் அதே அக்டோபர் மாதம் சியாட்டல் சென்றார். அவர் அங்கு பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் சிக்கிய தனது மகளை பத்திரமாக மீட்டுள்ளார். மேலும், தனது மகளை பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்பனை செய்தது அவரது காதலன் அரோன் சோரன்சன் என்பதையும் ஜான் கண்டுபிடித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த ஜான் தனது மகளின் காதலனான அரோன் சோரன்சனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காரில் கடத்திச்சென்றுள்ளார். ஸ்போகெனி நகருக்கு வெளியே காட்டுப்பகுதிக்குள் காரை நிறுத்திய ஜான், அரோன் சோரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஜான் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் அரோனை குத்தியும், கிழே கிடந்த கல்லை ஜானின் தலையில் போட்டும் கொலை செய்தார். அரோன் உயிரிழந்ததையடுத்து அவரது உடலை காரின் ‘டிக்கி’க்குள் அடைத்துவைத்துவிட்டு காரை ஒதுக்குபுறமான பகுதியில் நிறுத்திய ஜான் அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அந்த கார் பல மாதங்களாக அதேப்பகுதியில் நின்றுள்ளது.

இந்நிலையில், நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக பழுதடைந்த நிலையில் பல மாதங்களாக நின்றுகொண்டிருந்த காரை கடந்த மாதம் சில இளைஞர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த காருக்குள் மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காரின் டிக்கிக்குள் இருந்த மனித எலும்புக்கூடு அரோன் சோரன்சனின் உடல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் ஜான் இசென்மன் தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்தார். ஜான் இசென்மன் சரணடைந்ததற்காக காரணங்களை போலீசார் விசாரித்தபோது தனது மகளை பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்பனை செய்த ஆத்திரத்தில் தனது மகளின் காதலனான அரோனை, ஜான் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட அரோனின் உடல் ஓராண்டிற்கு பின்னர் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான் இசென்மன் தற்போது ஸ்போகெனி நகரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!