திருமணமான 4 நாட்களில் புதுமண தம்பதிக்கு நடந்த சோகம்!

திருமணமான 4 நாட்களில் விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் மனோஜ்குமார் (வயது 31). பி.இ.எம்.பி.ஏ. படித்த பட்டதாரியான இவருக்கும், சென்னை பீர்க்கன்காரணையை சேர்ந்த எம்.பி.பி.எஸ். டாக்டரான கார்த்திகா (30) என்பவருக்கும் கடந்த 28-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு மனைவியுடன் சென்னையில் தங்கி இருந்த மனோஜ்குமார், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி கார்த்திகாவுடன் சென்னையில் இருந்து தனது ஊரான அரக்கோணம் நோக்கி காரில் சென்றார்.

திருவள்ளூரை அடுத்த கூவம் சாலையில் சென்றபோது, எதிரே சிமெண்டு கலவை எந்திரம் இணைக்கப்பட்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக புதுமண தம்பதி சென்ற கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் மீது சிமெண்டு கலவை எந்திரம் இணைக்கப்பட்டு இருந்த லாரி கவிழ்ந்தது. லாரிக்கு அடியில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது.

காருக்குள் இருந்த புதுமண தம்பதி மனோஜ்குமார்-கார்த்திகா இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். லேசான காயத்துடன் உயிர் தப்பிய லாரி டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மப்பேடு போலீசார், சுமார் 5 மணி நேரம் போராடி லாரிக்கு அடியில் சிக்கிய காரை வெளியே எடுத்தனர். பின்னர் காரின் பாகங்களை வெட்டி எடுத்து, இடிபாடுக்குள் சிக்கி கிடந்த கணவன்-மனைவி இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

திருமணமான 4 நாட்களில் விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!