புனித் ரசிகர்களுக்கு நடிகர் சிவராஜ்குமார் உருக்கமான வேண்டுகோள்!

புனித் ராஜ்குமாரின் இறப்பு, குழந்தையை இழந்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளதாக நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவங்களும் நடந்தன.

இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் சகோதரரான நடிகர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு, எங்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி தங்களின் குழந்தைகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவு ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

அவர் என்னை விட 13 ஆண்டுகள் சிறியவர். அவர் இறப்பு எனது குழந்தையை இழந்துவிட்டது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் தீவிர வேதனை அடைகிறார்கள். எங்களுக்கு அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள வேதனை நிரந்தரமாக இருக்கும். ஆனால் நாம் அனைவரும் வாழ்க்கையை முன்னெடுத்து வாழ வேண்டும். நடந்த விஷயங்களை மறந்து பயணிக்க வேண்டியுள்ளது.

கர்நாடக அரசு குறிப்பாக போலீசார் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். எனது தந்தை இறந்தபோது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. ஆனால் இப்போது எந்த இடத்திலும் சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட நடக்கவில்லை. இதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்கள் குடும்பத்தின் மீது அவர் மிகுந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். யாரும் இத்தகைய முடிவை எடுக்கக்கூடாது. புனித் ராஜ்குமாரே இதை விரும்ப மாட்டார். அன்பு இருக்க வேண்டும். அதற்காக யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது. தங்களின் குடும்பத்தை பார்க்க வேண்டும். குடும்பத்தை கவனித்து கொள்வது முக்கியம்”.

இவ்வாறு சிவராஜ்குமார் கூறினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!