ஒருதலை காதலால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

பெங்களூரு அருகே காதலிக்க மறுத்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவைச் சேர்ந்தவர் உஷா(வயது 25). இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணா(30) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் உஷாவை, கோபாலகிருஷ்ணா ஒருதலையாக காதலிக்கத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் உஷாவிடம், கோபாலகிருஷ்ணா தனது காதலை தெரிவித்தார். அப்போது உஷா, கோபாலகிருஷ்ணாவின் காதலை ஏற்க மறுத்தார். மேலும் தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், அதனால் இனிமேல் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.

இந்த நிலையில் நேற்று காலையில் மல்லசந்திரா கிராமம் அருகே உஷாவை, கோபாலகிருஷ்ணா சந்தித்தார். அப்போது மீண்டும் அவர் தன்னை காதலிக்கும்படி உஷாவை வற்புறுத்தினார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உஷா, கோபாலகிருஷ்ணாவை கடுமையாக எச்சரித்து கண்டித்தார்.

இதில் கடும் கோபமடைந்த கோபாலகிருஷ்ணா, உஷாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த உஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து கோபாலகிருஷ்ணா தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பினார். அவர் கெத்துலாபுரா கிராமத்திற்கு சென்றார். அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!