விளையாடி கொண்டிருந்த 2½ வயது குழந்தைக்கு நடந்த சோகம்!

படப்பை அருகே ஏரியில் மூழ்கி 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வளையக்கரணை உமையாள் பரணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 34). இவர் குன்னவாக்கம் பகுதியில் கிரஸ்சரில் வேலை செய்து வருகிறார். இவருடைய 2-வது மகள் பிரதிஷா (2½).

நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை பிரதி‌ஷாவை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அருகே உள்ள ஏரி பகுதியில் தேடி பார்த்தனர். குழந்தையை காணாததால் இது குறித்து ஒரகடம் போலீசில் புகார் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏரிபகுதியில் குழந்தையை தேடினர். குழந்தை கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை குழந்தை ஏரியில் பிணமாக மிதந்தது. ஏரியில் மூழ்கி இறந்து போன குழந்தையை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி. வைத்தனர்.

இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!