நடிகர் ஷாருக்கான் மகனுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக் காவல் நிறைவடைந்ததயடுத்து இன்று அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மேலும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் 11ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டது.

ஆனால், அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்த நேரத்தில் சிறை நிர்வாகம் புதிய கைதிகளை ஏற்காது என்பதால், நாளை வரை தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்திலேயே வைத்திருக்கும்படி நீதிபதி தெரிவித்தார்.

நாளை ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறும் என்றும், அப்போது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!