நெல் மூட்டையால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபருக்கு நடந்த பரிதாபம்!

திருவள்ளூர் அருகே சாலையோரம் இருந்த நெல் மூட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கொண்டஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் விநாயகம் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகின்ற 28-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விநாயகம் தன் மோட்டார் சைக்கிளில் பேரம்பாக்கத்தில் இருந்து கொண்டஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சென்னை அரக்கோணம் சாலையில் சென்றபோது, திருவள்ளுர் அடுத்த கூவம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விவசாயிகள் உலர்த்தி வைத்திருந்த நெல் மூட்டையில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஏறி இறங்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்குள்ள பொதுமக்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்த சம்பவம் கொண்டஞ்சேரி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!