கொரோனா தடுப்பூசி போட்ட கர்ப்பிணிக்கு நடந்த சோகம்!

திருத்தணி அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 9 மாத கர்ப்பிணி பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள புதூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 32). இவரது மனைவி லாவண்யா (35). இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தனர். கடந்த ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 9 மாத கர்ப்பிணியாக இருந்த லாவண்யா தனது கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை அறிந்து நேற்று முன்தினம் அங்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். நள்ளிரவு அவருக்கு திடீர் என உடல் உபாதை ஏற்பட்டது.

இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள பட்டரைபெருமந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். நேற்று காலை அவருக்கு அதிக வலி ஏற்பட்டு வாயில் நுரை தள்ளியது.

இதையடுத்து லாவண்யாவை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதில் ஆவேசம் அடைந்த உறவினர்கள் பட்டரைபெருமந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

லாவண்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதால் இறந்து போனாரா? என்ற சந்தேகத்தில் கனகம்மாசத்திரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் லாவண்யாவின் மரணத்தை சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!