கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி போடச் சென்றவருக்கு, தவறுதலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தானேவில் நடைபெற்றுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் சுகாதார மையம் உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு நோய்களுக்கு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் ராஜ்குமார் யாதவ் என்பவர் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றிருக்கிறார். அப்போது அங்கு ஒரு இடத்தில் நீண்ட வரிசை நின்றிருப்பதை பார்த்த அவர், அது கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வரிசை என நினைத்து நின்றுள்ளார்.

அவருக்கு செவிலியர் ஒருவர் தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன்பிறகுதான் தெரிய வந்துள்ளது, அந்த வரிசை வெறிநாய்க்கடி எதிர்ப்பு தடுப்பூசி செலுத்த இருந்தவர்கள் என்று. இதனால் யாதவ் அதிர்ச்சி அடைந்தார். இந்தத் தகவல் மேல் அதிகாரிகளுக்குத் தெரியவர, கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட யாதவை கண்காணித்து வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!