சாப்பிட்டு தூங்கி வீட்டிலேயே கிடக்க பிறக்கல… ஆப்கான் சிறுமியின் ஆவேச பேச்சு

சாப்பிட்டு தூங்கி வீட்டிலேயே முடங்கி கிடக்க பிறக்கவில்லை என்று தலீபான்களுக்கு எதிரான ஆப்கான் சிறுமியின் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி அங்கு இடக்கால ஆட்சி அமைத்துள்ளனர். இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கெதிரான பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்றும் வெளியே நடமாடக்கூடாது என்றும் பல்வேறு சட்டங்களை தலீபான்கள் நடைமுறை படுத்தி வருகின்றனர்.

தற்போது ஆப்கான் பெண்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தனியார், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், மதராசாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்கான் பெண்கள் தலீபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களை கல்வி நிலையங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி கல்லூரி மாணவிகளும், சிறுமிகளும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சிறுமி ஒருவர் தான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்றும் தங்கள் உரிமை கேட்டு போராடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான அந்த வீடியோவில் பேசிய அந்த சிறுமி, “ நான் பள்ளிக்கு செல்ல வேண்டும். இன்றைய சிறுமிகள் நாளைய அம்மாக்கள். அவர்களுக்கு கல்வி கிடைக்கவில்லை என்றால், தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எப்படி அவர்களால் போதிக்க முடியும்?. நான் புதிய தலைமுறையை சேர்ந்தவள். சாப்பிட்டு, தூங்கி வீட்டிலேயே முடங்கி கிடப்பதற்காக நான் பிறக்கவில்லை. நான் பள்ளிக்கு செல்ல வேண்டும். இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும். பெண்கள் படிக்காவிட்டால் நாட்டின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும்? . கல்வி கற்பதின் மூலமே நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் ஏதாவது செய்யக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். நமது எதிர்கால சந்ததி எப்படி நல்ல ஒழுக்கத்துடன் இருக்க முடியும்?. கல்வி இல்லை என்றால், இந்த உலகத்தில் நமக்கு எந்த மதிப்பும் இருக்காது. கடவுள் எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உள்ளது. இந்த வாய்ப்பையும், எங்களின் உரிமைகளையும் பறிக்க தலீபான்கள் முயற்சிப்பது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!