தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ.. புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி!

தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதிய ஷேர்ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் புதுமாப்பிள்ளை, பாதிரியார் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து பெருங்களத்தூருக்கு நேற்று முன்தினம் இரவு ஷேர்ஆட்டோ புறப்பட்டது. அதில் புதுச்சேரியை சேர்ந்த அச்சக உரிமையாளர் நாகமுத்து (வயது 36), கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த பாதிரியார் ஐசக்ராஜ் (51), பெருங்களத்தூர் கொளப்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுந்தர்ராஜூ (37) உள்பட 6 பேர் பயணம் செய்தனர்.

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சிக்னல் அருகே சென்றபோது, அதிகவேகமாக வந்த ஷேர்ஆட்டோ, அங்கு சிக்னலில் நின்றிருந்த ஆம்னி பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வண்டியை வலதுபுறமாக திருப்பினார்.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ, சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி, எதிர் திசையில் உள்ள சாலையில் கவிழ்ந்தது. இதில் ஷேர் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த நாகமுத்து, பாதிரியார் ஐசக்ராஜ், சுந்தர்ராஜூ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் ஷேர் ஆட்டோவில் வந்த திருவண்ணாமலையை சேர்ந்த எழுமலை (65), உத்திரமேரூரை சேர்ந்த ஆனந்தகுமார் (27), பெருங்களத்தூரை சேர்ந்த ரஜினிகாந்த் (45) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.

புதுமாப்பிள்ளை

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பலியான நாகமுத்துவுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து நடந்த உடன் ஷேர் ஆட்டோ டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஷேர் ஆட்டோவை அதிவேகமாக ஓட்டிவந்த டிரைவரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர். தாம்பரம் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி 350-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும், அதில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வது, வேகமாக செல்லும்போது திடீரென பிரேக் பிடித்து நிறுத்துவது போன்றவற்றால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!