உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது மைனர் சிறுமி சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், 10 நாட்கள் ஆகியும் போலீசாரால் குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் #JusticeforKajal என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்தவர் ராஜு நயன் சிங். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த விஜய் பிரஜாபதி என்பவருக்கும் பண விஷயத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு 11 மணியளவில் ராஜு நயன் சிங் வீட்டிற்கு விஜய் பிரஜாபதி சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ராஜு நயன் சிங்யை தாக்கத் தொடங்குகிறார் விஜய் பிரஜாபதி. இதைப் பார்த்ததும் நயன் சிங்கின் மகள் காஜல் சிங் (17) அச்சமடைந்தார், இருப்பினும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, அந்த சம்பவத்தை காஜல் சிங் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை கண்டு ஆத்திரமடைந்த விஜய் பிரஜாபதி, சிறுமி என்று கூட பார்க்காமல் காஜல் சிங்கை தந்தை கண் முன்னே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
உயிரிழந்தார்
இந்த குண்டு காஜல் சிங்கின் வயிற்றுப் பகுதியில் பாய்ந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து விஜய் பிரஜாபதி தப்பியோடிவிட்டார். அச்சிறுமி லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வாரம் ஆன பிறகும் கூட, காஜல் சிங்கின் வயிற்றிலிருந்த துப்பாக்கி குண்டை போலீசார் அகற்ற முடியவில்லை. இதனால் கடந்த புதன்கிழமை அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திணறும் உபி போலீஸ்
இது குறித்து தனிப்படை அமைத்துள்ள போலீசார் விஜய் பிரஜாபதியை தேடி வருகின்றனர். குற்றவாளி குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆன பிறகும் கூட, போலீசாரால் குற்றவாளியைக் கைது செய்ய முடியவில்லை.
இதனிடையே சிறுமி காஜல் சிங்கின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்ற பலரும் ட்விட்டரில் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக #justiceforKajal என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர், காங்கிரஸ் ஏன் இந்தச் சம்பவம் தொடர்பாகக் குரல் கொடுக்கவில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.-source: oneindia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!