6 அடி உயரம் இல்லாதவருடன் ‘டேட்டிங்’ இருக்க முடியாது – இழப்பீடு கேட்ட பெண் டாக்டர்!

ஆஸ்திரேலியாவில் ஆறு அடி உயரம் இல்லாத நபரை தேர்வு செய்து கொடுத்ததற்காக டேட்டிங் நிறுவனத்தின் மீது பெண் டாக்டர் ஒருவர், ரூ. 3.7 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் மருத்துவர் எலைன் மூர் (36) என்பவர், கடந்த 2019ம் ஆண்டு சிட்னியில் உள்ள பிரபலமான ‘டேட்டிங்’ (ஆண் – பெண்ணுக்கு தேவையான ஜோடிகளை ஏற்பாடு செய்து வைக்கும் புரோக்கர் நிறுவனம்) நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தனக்கு இணையான ஜோடியை தேர்வு செய்து கொடுக்குமாறு முறையிட்டார்.

அதற்காக தனது விபரங்களை அந்த டேட்டிங் நிறுவனத்திற்கு அனுப்பி இருந்தார். அதில், ‘எனக்கு ஜோடியாக வரக்கூடியவர் மருத்துவராகவும், ஆஸ்திரேலிய – ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவராகவும், ரோமானிய கத்தோலிக்கராகவும், ஆறு அடி உயரமுள்ளவராகவும் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இவரது இத்தனை கண்டிஷனுக்கும் காரணம், இவரது குடும்ப ஆண் உறுப்பினர்கள் அனைவரும், ஆறு அடிக்கு குறைவானர்களாக இல்லை. அதனால், தனக்கு ஜோடியாக இருக்க கூடியவர் ஆறு அடிக்கு குறைவானவராக இருக்க கூடாது என்பதில் கண்டிப்புடன் இருந்தார்.

ஆனால், அந்த டேட்டிங் நிறுவனம், ஆறு அடிக்கும் குறைவான உயரமுள்ள ேடவிட் என்பவரை எலைன் மூருக்கு உறுதி செய்து, அதற்கான விபரங்களை அவருக்கு அனுப்பி உள்ளது. இதனால் கடுப்பான எலைன் மூர், விக்டோரியன் சிவில் மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் ட்ரிப்யூனில், டேட்டிங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில், ‘என் விருப்பதற்கு ஏற்ப புதிய வாழ்க்கையை தொடங்க நினைத்தேன். ஆனால், நான் எதிர்பார்த்தபடி ஆண் நண்பரை தேர்வு செய்து தரவில்லை. ஆறு அடிக்கும் குறைவான நபரை எனக்கு அடையாளம் காட்டினர்.

அவருடன் டேட்டிங் இருக்க முடியாது. அதனால், டேட்டிங் நிறுவனம் எனக்கு 4,995 டாலர் (ரூ.3.67 லட்சம்) பணத்தை இழப்பீடாக தர வேண்டும். மேலும், அவர்கள் என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும்’ என்று கூறினார். இவ்வழக்கு விக்டோரியன் சிவில் மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் ட்ரிப்யூனில் விசாரணைக்கு வந்தது. அப்போது ேடட்டிங் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘எலைன் மூருடன் உறவு வைத்துக் கொள்ள தயாராக இருந்த டேவிட் என்பவரின் விபரங்களைதான், அவருக்கு அனுப்பினோம்.

அப்போது, அவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்பட்டது. சில மாதங்களுக்கு பின் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பின்னர், அவரை சந்திக்க எலைன் மூர் மறுத்துவிட்டார். காரணம் கேட்டபோது, அவரது உயரம் ஆறு அடிக்கும் குறைவாக இருப்பதாக கூறினார்’ என்றார். தொடர்ந்து விக்டோரியன் சிவில் மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் ட்ரிப்யூன் உறுப்பினர் டேனியல் கால்வின் அளித்த உத்தரவில், ‘எலைன் மூர் தனக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கான தீர்வை தனியார் ஆலோசகரிடம் பெற வேண்டும். இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விசாரிக்கப்படும்’ என்றார்.- source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!