கொரோனா குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சா..? மன்சூர் அலிகான் பகீர் விளக்கம்!

கொரோனா என்று ஒன்றும் இல்லை. அதை வைத்து ஏமாற்றுகின்றனர் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாக வெளியான செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.


நகைச்சுவை நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் விவேக் இறந்ததாகவும், அரசியல்வாதிகள் இதை வைத்து வியாபாரம் செய்வதாகவும் விமர்சித்திருந்தார்.

அவரது பேச்சு தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரமாக மாறியது. இதையடுத்து அவர் மீது பல்வேறு தரப்பினரும் காவல் துறையில் புகார் கொடுத்தனர். தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதால் அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தினர். உடனடியாக கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரினார் மன்சூர் அலிகான். இதனிடையே அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இவ்விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த அவர், தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை எனவும் கூறினார். இந்நிலையில், விஜயகாந்த் பிறந்தநாள் நிகழ்வில் மன்சூர் அலிகான், “நானும், லியாகத் அலிகானும் விஜயகாந்துடன் இருந்திருந்தால் இந்நேரம் அவர் முதல்வராக இருந்திருப்பார். கொரோனா என்று ஒன்றும் இல்லை. அதை வைத்து ஏமாற்றுகின்றனர்” என்று பேசி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மன்சூர் அலிகானிடம் தொடர்பு கொண்டபோது, ‘நான் இரண்டு வருடமாக சொல்லிக் கொண்டேதான் இருக்கிறேன். ஆனால், தற்போது நான் எங்கும் சொல்லவில்லை என்று பதில் அளித்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!