திருமணம் ஆன 2 மாதத்தில் புதுமணதம்பதி அடுத்தடுத்து விபரீத முடிவு..!

திண்டுக்கல் அருகே திருமணம் முடிந்து 2 மாதத்தில் தம்பதியினர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.புதுக்கோட்டையச் சேர்ந்தவர் சேதுபதி (வயது 27). இவர் அரியலூரில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திண்டுக்கல் எம்.வி.எம். நகரைச் சேர்ந்த மோனிஷா (22) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் சேதுபதி மட்டும் அரியலூருக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அரியலூரிலேயே சேதுபதி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டது.

திருமணம் முடிந்து 2 மாதங்களிலேயே கணவர் இறந்து விட்டதால் சோகத்தில் இருந்த மோனிஷா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோனிஷாவின் உறவினர்கள் சேதுபதி வீட்டுக்கு சீர்வரிசை பொருட்களை எடுத்து வருவதற்காக சென்றனர்.

அங்கு இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சீர் வரிசை பொருட்களை எடுக்க வந்தவர்களை சேதுபதி குடும்பத்தினர் சிறை வைத்தனர். பின்னர் செல்போன் மூலம் தங்கள் உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு எரியோடு போலீசார் விரைந்து வந்தனர். சிறை வைக்கப்பட்டவர்களை மீட்டதுடன் சேதுபதியின் தந்தை சுப்பிரமணி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கணவர் இறந்த சோகத்தில் இருந்த மோனிஷா அடுத்தடுத்து இரு குடும்பத்தினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால் மேலும் கவலையடைந்தார். இதனால் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்ததும் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மோனிஷாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன 2 மாதத்தில் புதுமணதம்பதி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!