‘நானும் சக்தியும் பிரியறோம்’ உடுமலை கவுசல்யா பேஸ்ஃபுக்கில் சர்ச்சை பதிவு!

சாதி எதிர்ப்பு சமூக ஆர்வலர் கவுசல்யாவின் விவாகரத்து அறிவிப்பும், அது தொடர்பான பதிவு நீக்கமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா, கல்லூரியில் படிக்கும் போது பட்டியலினத்தை சேர்ந்த சங்கர் என்பவரை குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே சங்கர் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கவுசல்யா மீண்டு வந்து தனது பெற்றோருக்கு எதிராக சட்டப் போராட்டங்களை மேற்கொண்டார். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஆனால், மேல்முறையீட்டு வழக்கில் சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் மத்திய அரசு பணியில் சேர்ந்த கவுசல்யா, சாதிய ஆவணப் படுகொலைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும், கடந்த 2018ஆம் ஆண்டில் கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பறை இசைக்கலைஞரான சக்தி என்பவரை கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தை அப்போதே சில விமர்சித்து வந்த நிலையில், அதைப்பற்றி கவலை கொள்ளாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் குன்னூரில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், சக்தியை பிரிவதாக கவுசல்யா திடீரென தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதில், “நானும் சக்தியும் பிரிகிறோம். ஓராண்டாக மனதளவில் என்னை காயப்படுத்தியதால் இனி அவரோடு என்னால் வாழ இயலாது. விவகாரத்திற்கு திங்கள்கிழமை விண்ணப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், கவுசல்யாவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, வழக்கம்போல், அவருக்கு எதிராகவும், அவருக்கு ஆதரவாகவும், பொறுமையாக இருங்கள் என்று நடுநிலையாகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கவுசல்யா திடீரென அந்த பதிவை நீக்கியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவுசல்யா பதிவை மட்டும்தான் நீக்கினாரா அல்லது தனது முடிவை மாற்றிக் கொண்டாரா என்பது தெரியவில்லை.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!