மூதாட்டிக்கு ஒரே நாளில் 2 முறை தடுப்பூசி போடப்பட்டதால் பரபரப்பு!

வாய்மேடு அருகே ஒரே நாளில் மூதாட்டிக்கு 2 முறை தடுப்பூசி போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சி பெரிய திடல் பகுதியை சேர்ந்த நாகப்பன் மனைவி அலமேலு (வயது 70). விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வண்டுவாஞ்சேரி சரபோஜிராஜபுரம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் கலந்து கொண்டு மூதாட்டி அலமேலு வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் அவர் அங்கு உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

அந்த நேரத்தில் ஆண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்ததால் அந்த வரிசையில் பெண்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது ஊசி போட்டு விட்டு மரத்தடி நிழலில் அமர்ந்திருந்த அலமேலுவை சேர்த்து வரிசையில் அனுப்பி உள்ளனர்.
வரிசையில் சென்ற மூதாட்டி அலுமேலுக்கு 2-வது முறையாக மீண்டும் தடுப்பூசி போட்டப்பட்டது. இதற்காக பதிவு செய்ய சென்றபோது ஏற்கனவே அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது தெரிய வந்தது. இதைதொடர்ந்து அங்கிருந்து மூதாட்டி அலமேலு வீட்டுக்கு சென்று விட்டார்.


இந்த நிலையில் மாலையில் வீட்டில் இருந்த மூதாட்டியை சுகாதாரத்துறையினர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். வாய்மேடு அருகே ஒரே நாளில் மூதாட்டிக்கு 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!