நான் தான் ஆப்கானிஸ்தானிற்கு அதிபர் – துணை அதிபர் அம்ருல்லா சாலே பரபர டுவீட்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நானே அதிபர் என துணை அதிபர் அம்ருல்லா சாலே தெரிவித்தள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் துணை அதிபர் அம்ருல்லா சாலே டுவிட்டரில் அதிரடி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘நான் ஒன்றை விளக்க இருக்கிறேன். ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர் இல்லை என்றால், நாட்டை விட்டு ஓடிவிட்டால், ராஜினாமா செய்து விட்டால் அல்லது காலமானால் துணை அதிபர்தான் காபந்து அதிபராவார். நான் தற்போது நாட்டிற்குள்தான் இருக்கிறேன். சட்டப்படி நான்தான் காபந்து அதிபர். அனைத்து தலைவர்களிடமும் ஆதரவையும் ஒருமித்த கருத்தையும் பெற நான்அவர்களை அணுகி வருகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் மிகப்பெரிய அளவிற்கு சண்டையிடாமல் ஆட்சியை பிடித்த நிலையில் , துணை அதிபரின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!