காதலியை அடைய யூடியூப்பை பார்த்து வசிய பூஜை.. மாட்டிக்கொண்ட வாலிபர்

சுடுகாட்டிற்கு சென்று மனித எலும்புக்கூடுகள் மற்றும் வசியம் செய்ய தேவையான பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்று அந்தப் பெண்ணின் வீட்டின் முன்பு இரவில் பூஜை நடத்தி உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவை அடுத்த குண்டல பள்ளி, ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்த வர் முரளி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தினமும் இரவில் சில செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்வதும். எதிர்முனையில் பேசுவது பெண்களாக இருந்தால் அவர்களிடம் குரல் நன்றாக உள்ளது என்று புகழ்வதையும் வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.

இதுபோல் அறிமுகமான நல்கொண்டா மாவட்டம் குண்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மூன்று மாதங்களாக பேசி வந்துள்ளார். அந்தப்பெண்ணிடம் தன்னை ராம்சரண் ரேஞ்சுக்கு இருப்பேன் என்று கதை அளந்த முரளி நாம் இருவரும் நேரில் சந்திக்கலாம் என்று ஆசைவார்த்தைக் கூறியுள்ளார்.

இருவரும் நேரில் சந்தித்த நிலையில் அந்தப் பெண் திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. அந்தப்பெண்ணுக்கு முரளியை பார்த்ததும் பெரிய ஈர்ப்பு ஏதும் ஏற்படவில்லை. இருந்தாலும் தனது வாய்சாலத்தால் அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்த நினைத்த முரளி, திருமணம் ஆனாலும் பரவாயில்லை கணவரை விட்டு விட்டு தன்னுடன் வந்துவிடுமாறு ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது.

அதனை மறுத்த அந்தப் பெண் முரளியை ஏமாற்றி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அந்த பெண்ணை வசியப்படுத்த முரளி திட்டமிட்டுள்ளார். வசியப்படுத்துவது எப்படி என்று பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற வலைதளங்களில் உள்ள வீடியோக்களை பார்த்துவிட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று மனித எலும்புக்கூடுகள் மற்றும் வசியம் செய்ய தேவையான பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்று அந்தப் பெண்ணின் வீட்டின் முன்பு இரவில் பூஜை நடத்தி உள்ளார்.

அந்தப்பெண் காலையில் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பூஜை நடத்தியது தெரியவந்தது. வசிய பூஜை பற்றிய தகவல்கள் அந்த கிராம வாசிகளுக்கு தெரியவந்ததையடுத்து கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் மற்றும் அந்த பெண்ணுடன் சேர்ந்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, செல்போன் நம்பர் மூலம் முரளியை கண்டுபிடித்த போலீசார், அவரை கைது செய்தனர். விசாரணையின் போது அந்தப் பெண்ணை வசியம் செய்யவே பூஜையில் ஈடுபட்டதாக முரளி ஒப்புக்கொண்டார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!