விளையாட சென்ற 3 குழந்தைகளுக்கும் நடந்த துயரம்!

தென்காசி அருகே விளையாட சென்றபோது குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் பலியானார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் சண்முகாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு இஷாந்த் (வயது 5) என்ற மகன் உண்டு. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ் மகன் புவன் (4), பூபாலன் மகள் சண்முகபிரியா (5). இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவார்கள்.

நேற்று மாலையில் அங்குள்ள அம்மன் கோவில் பகுதியில் இஷாந்த், புவன், சண்முகபிரியா 3 பேரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். விளையாடச் சென்ற இஷாந்த் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாயார் சுகன்யா கோவில் பகுதிக்கு சென்று பார்த்தார்.

அங்கு குழந்தைகள் 3 பேரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.

அம்மன் கோவில் அருகில் உள்ள குளத்திற்கு சென்று பார்த்தபோது, இஷாந்த், புவன், சண்முகபிரியா ஆகியோர் குளத்தில் பிணமாக மிதந்து கொண்டு இருந்தனர். இதை கண்டு சுகன்யா அலறினார்.

கோவில் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது, 3 பேரும் குளத்திற்கு சென்று தண்ணீரில் இறங்கியுள்ளனர். அப்போது, அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் தண்ணீரில் மூழ்கிய 3 பேரும் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!