யாருக்கெல்லாம் PCOS பிரச்சனை வரலாம்?

இன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. இந்த பிரச்சனைக்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.


இன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. அல்முதிர் சினைமுட்டைகள் நோய்க்குறி அல்லது பலவுறை அண்ட நோய் (PCOS) என்பது, இனப்பெருக்க வயது பிரிவை சார்ந்த பெண்களிடையே காணப்படும் ஒரு பொதுவான கோளாறு ஆகும். டீன் ஏஜ் பருவ பெண்களுக்கு முன்னதாகவே நோய் கண்டறிவதற்கு பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம்.

டீன்ஏஜ் வயது முதல் 45 வயது வரை இந்த நோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இந்த நோய்க்குறிகளால் ஒரு பெண்ணின் உறவினர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பாரானால், அந்தப்பெண்ணுக்கும் PCOS வருவதற்குரிய ஆபத்து ஏற்பட சாத்தியம் உள்ளது.

இதற்கான அறிகுறிகள் என்ன?

ஒழுங்கற்ற மாதவிடாய்
முகம் மற்றும் மார்பில் மிகையாக முடிகள் வளர்ந்திருத்தல்
எடை அதிகரிப்பு
முடியிழப்பு
எண்ணெய் வடியும் சருமம் அல்லது முகப்பரு.

PCOS ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஹார்மோனான இன்சுலின் அதிக அளவில் இருப்பது உட்பட, உடலில் இயல்புக்கு மாறான ஹார்மோன் அளவுகள் தொடர்பானது. PCOS உள்ள பல பெண்கள் இன்சுலின் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு அதிக அளவு ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இது, நுண்குமிழ் உருவாவதுடன் குறுக்கிடக்கூடிய டெஸ்டோடெரான்; (ஆண் ஹார்மோன்) போன்ற ஹார்மோன்களை அதிகளவு உற்பத்தி செய்வதற்கு பங்களிக்கிறது. இதன்மூலம் இயல்பான கரு உருவாகும் இயக்கத்தை தடுக்கிறது.

PCOS-ன் காரணமாக வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் ?

PCOS உள்ள பெண்களுக்கு, இதய நோய், பக்கவாதம் மற்றும் 2-ம் வகை நீரிழிவுநோய் (உயர் ரத்த சர்க்கரை), உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பல ஆண்டுகளாக ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்ட பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதன் மூலம் அல்லது கருப்பை உள்ளே ஹார்மோன் செறிவூட்டப்பட்ட அமைப்பின் மூலம் (IUS) குறைக்க முடியும்.

PCOS-க்கான சிகிச்சை முறைகள்

நீர்க்கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். அறுவை சிகிச்சை இல்லாமலும் இதனை சரி செய்ய முடியும். அது நம்முடைய வாழ்க்கைமுறை மாற்றங்கள் தொடர்புடையவை. உடல்பருமனுள்ள பெண்கள் எடையை குறைப்பதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். 5 சதவீதம் எடை குறைப்பு கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியம் (முற்றிலும் முழு கோதுமையில் தயாரிக்கப்படும் ரொட்டி, முழு தானியங்கள், பழுப்பரிசி போன்றவை) கொழுப்பற்ற உணவுகள், மீன் சேர்த்துக் கொள்வது அவசியம். முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி, ஒழங்குமுறையற்ற மாதவிடாய் மற்றும் கருவுறல் பிரச்சனைகளுக்கு மருந்துகளும் உள்ளன. ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் PCOS பிரச்னை உள்ள பெண்களும் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!