மாயமான மலேசிய விமானம் பற்றி வியப்பூட்டும் தகவல்கள்…!


மூன்றாண்டுகளுக்கு முன்னர் 239 பேருடன் மாயமான விமானத்தை மீண்டும் தேடும் அமெரிக்க நிறுவனத்தின் முயற்சிக்கு இன்னும் ஒரு மாதத்துக்குள் பலன் கிடைக்கலாம் என கடல்சார் ஆய்வு நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர் என மொத்தம் 239 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச்.370) இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு) விழுந்தது


இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. ஆனால், 1046 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் தேடும் பணியை நிறுத்தி கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் கடந்த ஆண்டு அறிவித்தன.


இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் ‘கண்டுபிடித்தால் பணம் – இல்லாவிட்டால் சேவை இலவசம்’ என்னும் ஒப்பந்த அடிப்படையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான அந்த விமானத்தை தேட முன்வந்து விருப்பம் தெரிவித்தது. இந்த பணிக்காக ‘ஓசியன் இன்பினிட்டி’ என்னும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன கப்பல் தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு மலேசிய போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங் கடந்த 6-ம் தேதி அனுமதி அளித்தார். ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு உட்பட்ட கடல்பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட ‘ஓசியன் இன்பினிட்டி’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில், இந்த புதிய தேடுதலுக்கான 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் எல்லையை நிர்ணயித்து தந்துள்ள ஆஸ்திரேலிய நாட்டின் பிரபல அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த கடல்சார் ஆய்வு வல்லுனரான டேவிட் கிராஃபின் ‘ஓசியன் இன்பினிட்டி’ குழுவினர் இன்னும் ஒரு மாதத்துக்குள் மாயமான விமானத்தை கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த தேடுதல் வேட்டையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மலேசிய அரசு கெடு விதித்துள்ளது. தற்போது நாம் முதல் வாரத்தில் உள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் இந்த குழுவினரிடம் இருந்து ஏதாவது தகவலை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். – Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05