கொரோனாவால் மரணமடைந்த இயக்குநர் தாமிராவின் கடைசிப் பதிவு!

கரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்த இயக்குநர் தாமிரா, இனி யாரோடும் பகைமுரண் இல்லை எனக் கடைசியாகப் பதிவு எழுதியுள்ளார்.

கரோனா பாதிப்பால் இயக்குநர் தாமிரா மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 52.

மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தாமிரா என்கிற காதர் முகைதீன். 2010-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான ரெட்டைச் சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, பாலசந்தர் நடித்திருந்தார்கள்.

இதன்பிறகு சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்த ஆண் தேவதை படத்தை இயக்கினார். பிறகு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வந்தார்.

சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் தாமிரா. இதற்காக சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

தாமிராவின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த ஏப்ரல் 11 அன்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினார். அதில் அவர் கூறியதாவது:

இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை.
என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன்.
இனி யாரோடும் பகைமுரண் இல்லை.
யாவரும் கேளிர்

என எழுதியுள்ளார். இந்தப் பதிவைப் பகிர்ந்தும் குறிப்பிட்டும் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.- source: dinamani * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!