காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு – நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை..!


எண்ணூர் அருகே உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கற்பகம்.

இவர்களின் மகள் சந்தியா (வயது 19). இவர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். மேலும் கல்லூரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பகுதி நேரமாக வேலையும் பார்த்து வந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கமனூர் பகுதியை சேர்ந்த அஜித் (என்ற) ரபீக் (23), தாம்பரத்தில் உள்ள செல்போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் வேலை சம்பந்தமாக திருவொற்றியூருக்கு வந்தபோது இவருக்கும், சந்தியாவிற்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இருவிட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீட்டை விட்டு ஓடினர்

இந்த நிலையில் கடந்த மாதம் ரபீக், சந்தியா ஆகிய இருவரும் வீட்டை விட்டு ஓடி திருவண்ணாமலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து, தனது மகளை ரபீக் கடத்தி சென்றுவிட்டதாக சந்தியாவின் தந்தை சங்கர் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

போலீசார் தேடுவதை தெரிந்த காதல் ஜோடிகள், எண்ணூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.


சமாதானம்

அப்போது போலீசார் சமாதானம் பேசுவதற்காக இருவீட்டாரையும் அழைத்தனர். அதன் பேரில் சந்தியாவின் தந்தையும், ரபீக் சார்பில் ராயபுரம் போக்குவரத்து போலீஸ்நிலையத்தில் வேலை பார்க்கும் அவருடைய பெரியப்பாவும் எண்ணூர் போலீஸ் நிலையம் வந்தனர்.

அவர்கள் இருவரும் ரபீக்கிற்கும், சந்தியாவிற்கும் ஒருவருடம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக போலீசாரிடம் உறுதி அளித்தனர். இதனையடுத்து போலீசார் ரபீக், சந்தியா ஆகியோரை அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

விரக்தி

இந்த நிலையில் திருவண்ணாமலையில் உள்ள ரபீக்கின் பெற்றோரிடம் திருமணம் குறித்து பேசுவதற்காக சந்தியாவும், அவரது தந்தை சங்கரும் கடந்த சில நாட்களுக்கு செங்கமனூர் சென்றுள்ளனர்.

அப்போது ரபீக்கின் பெற்றோர் மதத்தை காரணம் காட்டி தங்கள் மகனுக்கு சந்தியாவை திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இதனால் சந்தியா மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். காதலனை திருமணம் செய்துகொள்ள முடியவில்லையே என விரக்தியில் இருந்த அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று முன்தினம் மதியம் சந்தியாவும், அவருடைய தாய் கற்பகமும் வீட்டில் இருந்தனர். குளிக்க ‘ஷாம்பூ’ வாங்கி வருமாறு கூறி தாய் கற்பகத்தை சந்தியா கடைக்கு அனுப்பிவைத்தார்.

தாய் வெளியே சென்றதும், வீட்டில் சமையல் செய்ய வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து சந்தியா தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டார்.

தீ பற்றி எரிந்ததும் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைத்து சந்தியாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் சந்தியா பரிதாபமாக இறந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த எண்ணூர் போலீசார் சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.-Source: dailythanthi

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05