ஆட்டோவில் சடலமாக மீட்கப்பட்ட காதல் பட நடிகர்…!

பரத் நடிப்பில் வெளியான ’காதல்’ படத்தில் நடித்த நடிகர் பாபு சடலமாக மீட்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதல்’. பாலாஜி சக்திவேல் இயக்கிய இப்படத்தில் பரத் ஹீரோவாகவும், சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்தார்கள். உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் விருச்சிககாந்த் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு. மேன்சனில் தங்கியிருக்கும் வருங்கால இயக்குநரிடம், சான்ஸ் கேட்க போவதாக அவரின் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் ’ஆனா டைரக்டா ஹீரோ தான்’ என்பார். சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் ரசிகர்களிடம் அதிகம் கவரப்பட்டது.

இப்படத்திற்கு பிறகு பாபுவுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது தாய், தந்தை இருவரும் மரணமடைந்ததால், மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். அவர் சாலைகளில் சுற்றித்திரியும் புகைப்படம் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, திரைத்துறையினர் சிலர் அவருக்கு உதவி செய்தனர். ஆனால் ஊரடங்குக்கு பிறகு பாபுவின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் சாலையோரம் நின்ற ஆட்டோவில் படுத்து உறங்கிய அவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!