சாவிலும் இணை பிரியாமல் சென்ற தம்பதி..!


பெருந்துறை அருகே சாவிலும் இணை பிரியாமல், கணவர் இறந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மனைவியும் இறந்தார்.

பெருந்துறையை அடுத்துள்ள முள்ளம்பட்டி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் என்கிற பழனிச்சாமி (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி முத்தாயம்மாள் (71). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

இதனால் ஓலப்பாளையத்தில் கணவன், மனைவி மட்டும் வசித்து வந்தார்கள். இந்தநிலையில், நேற்று காலை 10 மணி அளவில் மாணிக்கம் கண்ணவேலம் பாளையத்தில் உள்ள தன்னுடைய தோட்டத்திற்கு சென்றார். அப்போது அவர் மயங்கிக் கீழே விழுந்து அதே இடத்தில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு யாரும் இல்லாததால் மாணிக்கம் இறந்து கிடந்தது தெரியவில்லை. மாலை 6 மணி அளவில் அந்த வழியாக சென்ற சிலர் அவர் இறந்து கிடப்பதை பார்த்து, மாணிக்கத்தின் பக்கத்து வீட்டுக்காரரான சுப்பிரமணியம் என்பவரிடம் தகவல் கொடுத்தார்கள். உடனே சுப்பிரமணியம் மாணிக்கத்தின் மனைவி முத்தாயம்மாளிடம் இதுபற்றி கூறியுள்ளார். கணவர் இறந்த செய்தியை கேட்டதும் அப்போது அவரும் மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டார்.

கணவர் இறந்த செய்தியை அறிந்ததும் மனைவியும் இணைபிரியாமல் இறந்த சம்பவம் ஓலப்பாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!