என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணா… நடந்தது என்ன..?


என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணா கடலூரில் நடந்த வீரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரை சேர்ந்தவர் வீரா என்கிற வீரங்கையன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு கொலை-கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

கடலூர் உழவர்சந்தை அருகே ரவுடி வீராவுக்கு சொந்தமான பழக்கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீரா வீட்டுக்கு புறப்பட்டார்.

அப்போது 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் வீராவை பின்தொடர்ந்து சென்றனர். இதனை வீரா கவனிக்கவில்லை.

சுப்பராயலு நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் வீரா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் வீராவை சுற்றி வளைத்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அரிவாளால் வீராவை வெட்டினர். இதில் வீரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் ஆத்திரம் தணியாத அந்த கும்பல் வீராவின் தலையை துண்டித்தது. பின்னர் வீராவின் தலையை அருகில் குப்பங்குளம் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் முன்பு வீசி விட்டு சென்றனர்.

வீரா கொலை செய்யப்பட்ட தகவல் கடலூர் பகுதியில் இரவு நேரத்தில் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

வீராவை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடந்தது. இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

வீராவை வெட்டிக்கொன்ற கும்பல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மலட்டாறு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் மலட்டாறு பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. போலீசார் அவர்களை விரட்டி சென்று சுற்றி வளைத்தது.

அப்போது அந்த மர்ம கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. இதில் போலீசார் தாக்கப்பட்டனர். அதில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் போலீசாரையும் அரிவாளால் வெட்ட முயன்றார்.

உஷாரான போலீசார் ஒருவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது சுருண்டு விழுந்து இறந்தார்.

போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டவரின் பெயர் கிருஷ்ணா( 30). அவர் கடலூர் குப்பங்குளத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஆனார்.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணா நேற்று இரவு கடலூரில் நடந்த வீரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட வீராவுக்கும், தற்போது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அதன் பேரில்தான் வீரா கொலை செய்யப்பட்டுள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரவுடி கிருஷ்ணா சுட்டுக்கொல்லப்பட்டதும் அவரது வந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர்.

உஷாரான போலீசார் அவர்களில் 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவங்கள் கடலூர், பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!