திருமணமான 20 நாளில் போலீஸ்காரருக்கு நடந்த பரிதாபம்..!


சமயபுரம் அருகே சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பலியானார்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மணக்காடு பகுதியை சேர்ந்த ஜெயராஜின் மகன் ரஞ்சித்குமார் (வயது 29). இவர் மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சுகன்யா (26). இவர்களுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் திருமணமானது.

இந்தநிலையில் நேற்று மதியம் பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருச்சி-லால்குடி சாலையில் அகிலாண்டபுர பகுதியில் சென்ற போது, அங்கு சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரஞ்சித்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 20 நாட்களில் போலீஸ்காரர் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!