தனியார் தொழிற்சாலையில் தொழிலாளி திடீர் மரணம்..!


தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி திடீரென இறந்து போனார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 38). இவர் முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பணிக்காக வேலைக்கு சென்றார். தொழிற்சாலையில் வேலை பார்த்து கொண்டிருந்த அவர் நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக, அவரது வீட்டிற்கு நிர்வாகத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு அவரது உடல் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி புலமாடி மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி சிறிது நேரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி கொடுத்த புகாரில் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேட்டை நாதன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகிலா விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட போது பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும் என்று தெரிவித்தனர். இறந்த வீரபாண்டிக்கு நந்தினி (13) என்ற மகளும், ஆனந்த் (7) ஒரு மகனும் உள்ளனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!