15 மாட்டுவண்டி , 100 கார்களில் தங்கை மகளுக்கு சீர் கொடுத்து அசத்திய தாய்மாமன்..!


ஈரோடு அருகே தங்கை மகளுக்கு 100 கார்களில், 15 மாட்டு வண்டிகளில் சீர் கொடுத்து அசத்தியுள்ளார் தாய்மாமன்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ராஜா என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அவரது தங்கை மோகனப்பிரியாவுக்கு ரிதன்யா, மித்ரா ஸ்ரீ என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த இருவருக்கும் ஒரே நாளில் சடங்கு நடத்த மோகனப்பிரியா முடிவு செய்தார். கள்ளிப்பட்டி கிராமத்தில் சடங்கு நடத்தப்படுவது குறித்து தனது அண்ணனுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஊர் மக்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு தாய்மாமன் சீர் கொடுத்து அசத்தியுள்ளார். 100 கார்கள், 15 மாட்டு வண்டிகள் முழுக்க பொருட்களால் நிரப்பி பிரமாண்டமாக சீர் கொடுத்துள்ளார் மருத்துவர் ராஜா. முதல் மாட்டு வண்டியை அவர் ஓட்டிக் கொண்டு செல்ல, பின்னால் அவரது உறவினர்கள் குதிரைகளிலும் கார்களிலும் சீர்களைக் கொண்டு வந்துள்ளனர். இதனை பார்த்த ஊர் மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட குடிசைகளில் அந்த சீர்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சடங்கு நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் பித்தளை பாத்திரங்களில் உணவு சமைத்து பரிமாறப்பட்டது. காங்கேயம் காளைகள் மற்றும் வெள்ளாடுகளை ராஜா சீர் கொடுத்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக மருத்துவர் ராஜா கூறுகையில், வருங்கால சந்ததியினருக்கு நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் சீர் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!